உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்
சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.
''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.
''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.
காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.
நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.
நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.
இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.
''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!
ஜெபியுங்கள்.... இது போன்ற நேர்மையான அதிகாரிகள் நம் தேசத்தில் எழும்பட்டும்!! தேசம் ஆசீர்வாத்த்தால் நிரம்பும்.! லஞ்சம் ஒழியும்! நீதி நிலைநாட்டப்படும்! நேர்மையான அதிகாரிகளுக்காக ஜெபியுங்கள்!!
---------------------------------------- மேலம் படியுங்கள்.......லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து: ஒரு "ஹீரோ'வின், "ப்ளாஷ்பேக்'
"ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்...' புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, "ஹீரோ' மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.
புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். சிறுவனாய் இருந்தபோது முளைத்த, "கலெக்டர் கனவு' நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம். தர்மபுரியில் பயிற்சி கலெக்டர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ., திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர், கோவை கலால் பிரிவு துணை கமிஷனர், சென்னை, டி.ஆர்.ஓ., தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், மதுரை கலெக்டர் என, இவர், "பந்தாடப்பட்ட' விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.
பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில:
* அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், "தோழனாக' மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.
* காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, "பெப்சி' குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, "சீல்' வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.
* கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், "சிண்டிகேட்' முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, "செக்' வைத்தார்.
* அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, "ரெய்டு' நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.
* சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.
* தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, "இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்' என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, "நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்' என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.
* நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.
* இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'
இவர் பிறந்த மண்ணை தொட்டு வணங்க வேண்டும்,
ReplyDelete